Share

Aug 29, 2016

காரணச் செறிவு


திருவல்லிக்கேணியில் ஞானக்கூத்தன் இரங்கல் கூட்டத்தில் பாலகுமாரனின் பேச்சில் ஒரு ஆச்சரியப்படத்தக்க தகவல் ஒன்று கிடைத்தது. அவர் நெக்குருகி நெகிழ்ந்து சொன்னார். “ நான் இன்று சுவையாக எழுதுகிறேன் என்றால் அது ஞானக்கூத்தன் போட்ட பிச்சை!”

நிறைய நாவல்கள் எழுதிய பாலகுமாரனிடம் ஆதங்கத்துடன் “கவிதையெழுதுவதை விட்டுட்ட பார்த்தியா” என்பாராம் ஞானக்கூத்தன்.
பாலகுமாரனின் கவிதைவரிகள் உடனே நிழலாடியது.
“ சவுக்கடி பட்ட இடத்தை நீவிடத்தெரியாக்குதிரை
கண் மூடி வலியை வாங்கும் இதுவுமோர் சுகமென்று
கதறிட மறுக்கும் குதிரையைக் கல்லென்று நினைக்க வேண்டாம்”
பாலகுமாரன் மிகவும் தளர்ந்து கையில் ஊன்றுகோலுடன் வந்திருந்தார்.எழுத்துலக கமலஹாசனாக கொண்டாடப்பட்டவர்!
மிகவும் தளர்ந்து போய் இருந்த அவர் பேசுவதற்காக மேடை ஏற வேண்டி இருந்த வேளை, தள்ளாடிய பாலகுமாரனை நான் அவர் கை பிடித்து நடத்தி மேடையில் ஏற்றி அமர வைத்தேன்.

ஞானக்கூத்தன் பத்து வருடங்களுக்கு முன் திருப்பூர் வந்திருந்தார். 

அன்று அவர் அங்கு சொன்னதை இந்த திருவல்லிக்கேணி இரங்கல் கூட்டத்தில் நான் நினைவு கூர்ந்தேன். “ராஜநாயஹம் கவிஞர் அல்ல. ஆனாலும் கவிஞர் ஞானக்கூத்தனின் மாணாக்கன் என்று சொல்லிக்கொள்ள முழு உரிமை இவருக்கு உண்டு!”
தமிழ் நாட்டில் ராஜநாயஹத்தைத் தவிர மற்றவர்கள் எல்லோரும், எல்லோருமே கவிஞர்கள் தானே!
………………………………….


கலாப்ரியாவால் இப்படி திகட்டவே திகட்டாத கவிதைகளை தொடர்ந்து எழுத முடிகிறது.
எவ்வளவு முறை நாதஸ்வர வாசிப்பு பார்க்கவும் கேட்கவும் கிடைக்கிறது.
எவ்வளவு முறை இரட்டை நாதஸ்வரக் கச்சேரி பார்த்திருக்கிறோம்.
’இசை மழையில் நனைவது’ கூட cliché தான். கவிஞனுக்குத் தானே அபூர்வ விஷயங்கள் கண்ணுக்குப் புலப்படுகிறது.
இனி நாதஸ்வரம், தவில் வாசிக்கக்கேட்கும்போதும் நாதஸ்வர வித்வான்களோ, தவில் வித்வான்களோ வியர்வை துடைத்துக்கொள்ளும்போதெல்லாம் கலாப்ரியாவின் இந்த கவிதை நினைவில் வரும்.
அந்த வியர்வையும், வியர்வை துடைக்கும் துண்டும்!
“ இரட்டை நாதஸ்வரம்
வாசிக்கிறார்கள்
ஒருவர் சற்றே நிறுத்த
மற்றொருவர் தொடர
துடைத்துக்கொள்கிறார்கள்
மாற்றி மாற்றி
அவை மட்டும் இசை
மழையில் தொடர்ந்து
நனைந்து கொண்டு”
இன்னொரு கலாப்ரியா கவிதை
“விதையின் ஒற்றைக்
கலவியை நாள் தோறும்
காற்றிடம் கிசுகிசுக்கிறது
ரகசியமாய் மரம்
வெட்கமின்றி அவற்றை
வானெங்கும் பிதற்றித் திரிகின்றன
ஒட்டுக்கேட்ட பறவைகள்”
…………………………….

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.