Share

Feb 3, 2009

கொழந்தை



அந்த காலம். அவர் பேர் கொழந்தை. 'மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்,மரம் சாய்ந்து போனால் விலையாகலாம், மலர் சாய்ந்து போனால் சரமாகலாம், காதல் மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்?' என்று உருக்கமான டிஎம்எஸ் பாடலை அழகாக பாடுவார்.

ஆள் குள்ளம்.முப்பது வயசு அப்ப. கால் ஊனம் என்றாலும் எவ்வளவு தூரம் என்றாலும் நொண்டி,நொண்டி நடப்பார். பழைய படம் பார்க்க ரொம்ப ஆசைப்படுவார். ஏழுமணிக்கு ஆரம்பிக்கும் தத்தனேரி டூரிங் டாக்கீஸ் போக நண்பர்களுடன் கிளம்புவார். ஒரே ப்ரொஜெக்டர் என்பதால் டூரிங் டாக்கீஸ் மூணு இண்டெர்வல் விடுவார்கள். படம் இரவு பன்னிரண்டு மணிக்கு முதல் ஷோ முடியும். கொழந்தை சலிக்க மாட்டார்.

ஆறு மணி போல குழந்தை , ஆட்டு மூக்கன், சோலை எல்லோரும் கிளம்புவார்கள். கஞ்சா அக்கரையில் தான்வாங்கணும் .' டே ஆட்டு மூக்கா , எங்க அப்பா கிட்டே போற வழியிலே சொல்லிட்டு போவோம். '

கொழந்தைக்கு அம்மா கிடையாது. சித்தி கண்டபடி ஏசியதால் சடவுடன் அப்பா திண்ணையில் எரிச்சலுடன் உட்கார்ந்திருக்கிறார். கொழந்தை தந்தையை அப்ரோச் செய்கிறார்.
" அப்பா, நான் தத்தனேரி படத்துக்கு போறேன் ]. எம்ஜியார் படம். பழைய படம். மதுரை வீரன். வர எப்படியும் ராவு ஒரு மணி யாகும். மூணு இண்டெர்வல் பாருங்க. நீங்க சித்தி கிட்டே சொல்லி எனக்கு தயிர் சாதம் ... இல்லே .. அது வேண்டாம் .. சூடா சுடு சாதத்திலே சுட சுட பசும்பாலை ஊத்தி , நிறைய சீனி போட்டு ...இல்லைன்னா நீங்க ஒன்னு செய்யுங்களேன்...உரிச்ச வாழைப்பழம் ரெண்டு நல்லா பிணைஞ்சு சுடு சோருல மிக்ஸ் பண்ணி ..."

வேதனை முகம் எல்லாம் பரவ, வலி தாங்க முடியவில்லை என்பது போல இரண்டு கண்ணையும் மூடி இரண்டுகைகளால் காதுகளையும் மூடி கொழந்தை யோட அப்பா குத்த வைத்து திண்ணையில் உட்கார்ந்த நிலையிலேயே அழுத்தமா சொல்வார்
" கொழந்தை .... ரொம்ப கொஞ்சாதப்பா ... ரொம்ப கொஞ்சாத "
கொழந்தை இந்த முகரடி பற்றி சட்டையே செய்யமாட்டார் . ' நான் வர்ரேன்பா ! டாட்டா .. டாட்டாப்பா ..'
வைகையாற்றிலே சின்ன கச்சேரி நடக்கும் . " மலை சாய்ந்து போனால் " கொழந்தை உருக்கமாக பாடுவார். ஆட்டு மூக்கன் வாயாலே தாளம் போடுவான், சோலை இரண்டு கல்லை எடுத்து தட்டி ரிதம் கொடுப்பான்.
பாட்டு முடிந்ததும் அக்கரைக்கு போய் கஞ்சா வாங்கி கொண்டு மாருதி டூரிங் டாக்கீஸ் நோக்கி போகும்போது தியேட்டரில் " திரள் மணி கதிர்கள் வீசி திசை ஆளும் ஆதவன் " பாட்டு கேட்கும் . படம் போடபோகிறான் .கடைசி பாட்டு .
ஆட்டு மூக்கன் , சோலை எல்லோரும் ஓடுவார்கள்.
'சீக்கிரண்டா . டிக்கெட் எடுங்க ' கொழந்தை வேகமாக நொண்டிக்கொண்டே சொல்வார்.

1 comment:

Note: Only a member of this blog may post a comment.