Share

Sep 29, 2008

ஞாநி விளக்கம்

வணக்கம்.

நான் ஜான் ஆபிரஹாமை ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறேன். அது நீங்கள் குறிப்பிடுவது போல திரைப்பட விழாவிலும் அல்ல; ஓடோடிப் போயும் அல்ல. சங்கீத நாடக அகாதமியின் நாடக விழா எர்ணாகுளத்தில் நடந்தபோது, கூத்துப்பட்டறையின் நாடகமும் இடம் பெற்றது. அதற்கு வந்திருந்த தமிழக நாடகக்காரர்கள் சிலர் அப்போது அம்மெ அறியன் படத்துக்கு மக்களிடம் நிதி திரட்டும் பணியை தொடங்க இருந்த ஜானை சந்திக்கச் சென்றோம். ஜானும் அவர் குழுவினரும் கையால் எழுதிய சுவரொட்டிகளைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.கொச்சி கோட்டை சுவரில் சுவரொட்டியை ஒட்டிவிட்டு ஒரு ஸ்டூல் மீது ஏறி நின்று ஜான் பேசி உண்டியல் குலுக்கி நிதி திரட்டுவதைத் தொடங்கி வைத்தார். அதை நான் எடுத்த புகைப்படமும், அன்றே படகுத்துறையில் ஜானையும் ஒரு குழந்தையையும் நான் எடுத்த புகைப்படமும் ஆர்.ஆர்.சீனிவாசன் வெளியிட்ட ஜான் பற்றிய நூலில் பின்னர் பிரசுரிக்கப்பட்டன. சுவரொட்டி எழுதும் இடத்தில் ஜானிடம் என்னை ஞாநி என்று அறிமுகம் செய்தபோதுதான், ஜான் சிரித்தபடி தான் அஞ்ஞானி என்று சொன்னார்.பின்னர் அன்று முழுவதும் நாங்கள் ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்தோம். பின்னர் எப்போதும் நான் ஜானை எங்கேயும் சந்திக்கவில்லை. ஜான் படங்களில் அ.கவும் அ.அ.வும் எனக்குப் பிடித்த முயற்சிகள். செரியச்சனோட குரூர நிருத்யங்களில் சில காட்சிகள் நன்ராக அமைந்திருக்கும். ஜான் உருவாக்கிய அக்ரஹாரத்தில் கழுதையில் நடித்த இசை மேதை எம்.பி.சீனிவாசன் என் மதிப்புக்குரிய நண்பர். ஜானுடன் ஒடெசா திரைப் பட இயக்கத்தில் பங்கேற்ற பிரகாஷ் மேனனும் என் நண்பரே. பிரகாஷ் மேனன் இன்றும் சென்னையில் மலையாள டி.வி தொடர் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். இப்போது தொடர்பு இலை. ஜான் பற்றிய ஜெயமோகனின் ஒரு குறிப்பு முற்றிலும் உடன்பட முடியாதபோதும் நம் பரிசீலனைக்குரியது. அக்ரஹாரத்தில் கழுதை திரைக்கதை வசன நூலை அடிப்படையாகக் கொண்டு பரீக்‌ஷாவின் மேடை நாடகமாக்கலாம் என்று ஒரு முறை நினைத்தோம். அது கைகூடவில்லை.

அன்புடன்
ஞாநி


உங்கள் வலைப்பூவில் பின்னூட்டம் இட்டால் அது செல்லவிலை. எனவே மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன். ----------------

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.